மாவட்டங்கள்தோறும் புத்தக கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்படும் – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று புத்தக கண்காட்சி பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த 45-வது புத்தக கண்காட்சியை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று தொடங்கி வைத்தார். புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்த பின்னர் 6 எழுத்தாளர்களுக்கு கருணாநிதி பொற்கிழி விருதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
அதன் பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
கொரோனா தொற்று பரவலால் புத்தக கண்காட்சி தேதியை தள்ளிவைத்தது முதலில் சிரமமாக இருந்தது. மாவட்டங்கள்தோறும் புத்தகக் கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்படும். இதற்கு அரசு ஒத்துழைப்பு வழங்கும். சென்னை புத்தகக்காட்சிக்கு வழக்கமாக வழங்கப்படும் ரூ.75 லட்சத்துடன் கூடுதலாக ரூ.50 லட்சம் என மொத்தமாக ரூ.1.25 கோடி தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
செம்மொழி தமிழின் சிறப்புகளை உலகமெங்கும் எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்தாய் வாழ்த்து மாநில பாடலாக ஆக்கப்பட்டுள்ளது. ஆலயங்களிலும் தமிழ் ஒலிக்க தொடங்கி உள்ளது. அறிவுக் கோயில்களை கட்டுவதில் ஆர்வமாக உள்ள அரசுதான் இந்த அரசு. மதுரையில் கருணாநிதி பெயரில் பிரமாண்டமான நூலகம் அமைக்கப்படுகிறது.
இதுவரை எனக்கு அன்பளிப்பாக வழங்கிய 1.50 லட்சம் புத்தகங்களை, இலங்கை யாழ்ப்பாணம் நூலகம் தொடங்கி பல ஊர்களில் இயங்கும் நூலகங்களுக்கு வழங்கியுள்ளேன். நான் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ என்ற நூல் இம்மாத இறுதியில் வெளியாகும். என்னுடைய 23 ஆண்டு கால வாழ்க்கை பயணத்தை அதில் நான் பதிவு செய்திருக்கிறேன்.
